HybridAnalyzer Tamil: tamil

Hot

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Sunday 15 May 2022

கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோதமான பிராணிகள்! 10 Most Strangest Beached Creatures!

May 15, 2022 0

 கடல் நம்மை பல வகையில் ஆச்சரியப்படுத்துகிறது. சில நேரங்களில் கடலில் வாழக்கூடிய பிராணிகள், ஏதோ ஒரு காரணத்தால் கடலை விட்டு வெளியே வந்து கரையில் ஒதுங்கி நிற்கும். இந்த சம்பவம் பல நேரங்களில் நடப்பதாக இருந்தாலும், சில நேரத்தில் பிரம்மாண்டமான திமிங்கலம், வினோதமான மர்ம பிராணிகள் என நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பிராணிகளும் கூட கரை ஒதுங்குகின்றன. அதுபோல கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆச்சரியமான பிராணிகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Read More

Monday 30 September 2019

இரவு நேரத்தில் போகமுடியாத உலகின் பயங்கரமான 10 இடங்கள்!

September 30, 2019 0


இரவு நேரத்தில் போகமுடியாத உலகின் 10 மர்ம இடங்கள்


10. ஸ்க்கின் வால்க்கர் பண்ணை (Skin Walker Ranch)


சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விவசாய பண்ணை அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. இங்கு பேய்கள், வித்தியாசமான விலங்குகள், பறக்கும் தட்டுகள் என பலவற்றை பலர் பார்த்த்தாக கூறியுள்ளதால் அமானுஷ்யங்களுக்கு மிகவும் பெயர்போன ஒரு பண்ணையாக இது உள்ளது. இவை மட்டுமில்லாமல் பல கால்நடைகளும் வளர்ப்பு விலங்குகளும் மிகவும் கொடூரமான முறையில் இறந்துள்ளன. ஸ்கின் வால்கர் பண்ணை என இந்த இடத்திற்கு பெயர் வர ஒரு காரணமும் உண்டு. அது என்னவென்றால் அமெரிக்க பழங்குடி மக்களிடம் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அதாவது, அந்த காலத்தில் ஸ்கின் வால்கேர் என்ற பெயரில் ஒரு சூனியக்காரி இருந்ததாகவும் அவள் தன்னை எந்த உருவத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவளாக இருந்ததாகவும் நம்புகிறார்கள். மேலும் மக்கள் பார்த்த மர்மமான உருவங்கள் அனைத்தும் அந்த கருப்பு மந்திரவாதியின் உருவம்தான் என அந்த பழங்குடி மக்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டதும் பலர் அந்த இடத்தை ஆய்வு செய்தார்கள். ஆனால், ஒருவர் மட்டும் அந்த முழு மர்ம இடத்தையும் விலைக்கு வாங்கி ஆய்வு செய்வதற்கு என்றே ஒதுக்கிவிட்டார். இந்த பண்ணையில் இவர்கள் கடைசியாக பார்த்தது ஒரு ஓநாய் சிவப்பு நிற கண்களுடன் கால்நடைகளை கொடூரமாக அடித்துக் கொன்ற காட்சிதான். அந்த சமயத்தில் அதை பல முறை துப்பாக்கியால் சுட்டும் அதற்கு ஒன்றும் ஆகவில்லை என ஒரு விவசாயி கூறியுள்ளார். இப்படி மர்மங்கள் நிறைந்துள்ள அந்த இடத்தை பற்றி ஸ்கின் வால்கேர் ரேஞ்ச் என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.

9. ஹேரி ஹேண்ட்ஸ் ரோடு (Hairy Hands Road)


நீங்கள் சிறியதாக ஒரு கற்பனை செய்து பாருங்கள் - மிக அடர்த்தியான ஒரு காட்டுப்பகுதியில் இரவு வேளையில் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சுற்றியும் மயான அமைதி நிலவிக் கொண்டிருக்கும் வேலையில், பயங்கரமான, முடியுடன் கூடிய இரண்டு கைகள் உங்கள் கார் ஸ்டேரிங்யை பிடித்தால் எப்படி இருக்கும்? அந்த சமயத்தில் உங்கள் மனநிலையும் இதயத்துடிப்பும் அதிக பதட்டத்தை அடையும் அல்லவா? அதேபோலத்தான் இந்த ரோட்டில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களுக்கு ஏற்படுவதாக பலர் கூறியுள்ளார்கள். இங்கிலாந்தில் உள்ள டார்க் மோர் எனும் இடத்தில் உள்ள மிக குறுகலான ஒரு காட்டுவழிப் பாதை தான் இந்த ஹேரி ஹேண்ட்ஸ் ரோடு 3 3 2 1 2 என்ற பெயரில் இருந்த இந்த சாலையை, அங்கு நடக்கக்கூடிய அமானுஷ்யத்தின் அடிப்படையில் ஹேரி ஹேண்ட்ஸ் சாலை என அழைக்கிறார்கள். முதலில் இந்த சம்பவங்களை பற்றி யாரும் நம்பவில்லை. ஆனால் அங்கு தொடர்ச்சியாக நடந்த கார் விபத்துக்களுக்கும், அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பின்தான் பலர் நம்ப ஆரம்பித்தார்கள். சில காலங்களுக்கு முன் இங்கு விபத்தில் இறந்த ஒருவரின் ஆத்மா தான் இந்த வேலைகளை செய்கிறது என பலராலும் கூறப்படுகிறது.

8. மொகுசெங் (Moguicheng)


இது சீனாவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதி. சீன மொழியில் மொகுசெங் என்றால் பேய்கள் அல்லது சாத்தான்கள் அதிக அளவில் குடியேறியுள்ள இடம் என பொருள். இந்த பாலைவனத்தில் காண்போரை எளிதாக கவர்ந்து ஈர்க்கின்ற வகையில் அழகான பல மலை குன்றுகள் உள்ளன. ஆனால், அழகு இருக்கக்கூடிய இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் என்பதற்கு ஏற்றார்போல அந்த இடத்தை கடந்து செல்லும் போது, வித்தியாசமான சத்தங்களையும், சில சமயங்களில் புலி உருமுவது போலவும், சில சமயங்களில் குழந்தைகள் அலறும் சப்தங்களையும் கேட்டதாக பலர் கூறியுள்ளார்கள். இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தும், அங்கு கேட்கக்கூடிய சப்தங்களுக்கு யாராலும் சரியான விடையை கூற முடியவில்லை. சில காலங்களுக்கு முன்பு அந்த இடத்தை சுற்றி இருந்த கிராம மக்களும் தங்களது வசிப்பிடங்களை கைவிட்டுவிட்டு வேறு இடங்களில் குடியேறி விட்டார்கள். இப்போது அந்த இடம் மனிதர்கள் யாரும் இல்லாமல் ஒரு முழு அமானுஷ்ய பகுதியாகவே மாறிவிட்டது.

7. பேய் கடல் (The Devil's Sea)


பேய் கடல் என குறிப்பிடப்படக்கூடிய இந்த இடம் ஜப்பான் கடற்கரை பகுதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. முன்னதாக பெர்முடா முக்கோணத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுபோலவே இந்த பகுதியை கூட பசிபிக் பெருங்கடலின் பெர்முடா முக்கோணம் என அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த கடற்பகுதி மிக மோசமானது. சொல்லப்போனால் பெர்மூடா முக்கோணம் மற்றும் இந்த பேய் கடல் இரண்டுமே நேர் எதிராகத்தான் அமைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பூமியிலுள்ள காந்த சக்தி அதிகமாக 12 உள்ள இடங்களில் இதுவும் ஒன்று. அந்த அதீத காந்த சக்தியால் தான் இந்த வழியாக போகும் கப்பல்கள் மற்றும் படகுகள் காணாமல் போகின்றன என ஆய்வாளர்கள் விஞ்ஞான ரீதியாக கூறினாலும், அந்த கடல் பகுதியில் பயணித்து வந்தவர்கள் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது எனவும், இந்த பகுதி வழியாக அமானுஷ்யமான பேய்களும் அருவருப்பான உருவங்களும் சிறிய சிறிய படகுகளில் செல்லும் காட்சிகளை பார்த்ததாக கூறியுள்ளார்கள்.
இவர்கள் கூறுவதை கேட்கும் போது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில், இறந்தவர்களின் ஆத்மாக்களை படகு மூலமாக வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும் காட்சி தான் நினைவிற்கு வருகிறது.
அந்த வழியாக பயணித்தவர்கள் இப்படி கூறுவதாலேயே இந்த இடத்தை பேய்களின் கடல் என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த இடத்தைப் பற்றி மூவாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சீன புராண கதைகளில் கூட, அங்கு மிகப்பெரிய டிராகன் இருந்ததாகவும் அது அந்த வழியாக செல்லும் கப்பல்களை மூழ்க செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

6. யாங்சி கிராமம் (Yangsi Village)

சீனாவில் உள்ள இந்த கிராமத்தில் என்ன அமானுஷ்யம் என்றால் அது அங்குள்ள மனிதர்கள் தான். ஆம் இங்கு வாழும் மனிதர்களின் உயரம் சராசரி மனிதர்களின் உயரத்தை விட மிகக் குறைவு நூற்றில் நாற்பதுக்கு மேற்பட்டோரின் உயரம் 2 அடி முதல் 4 அடி மட்டுமே. இந்த பிரச்சினைகளுக்கு எந்த ஒரு ஆராய்ச்சியாளர் அல்லது மருத்துவர்களால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. ஆனால், இந்த மக்கள் இப்படி குள்ளமாக பாதிக்கப்பட ஆரம்பித்தது என்னவோ 1920-களில் இருந்துதான். அடிக்கடி பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள மண், நீர், விளைபொருட்கள் மற்றும் மனிதர்களையும் சோதனை செய்கிறார்கள். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால் அவர்களால் எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இதே மாதிரி கண்டுபிடிக்க முடியாத ஒரு விசித்திரம் தான் கேரளாவில் உள்ள கோடின்ங்கி கிராம மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால், கேரளாவில் உள்ள மனிதர்கள் குள்ளம் கிடையாது. மாறாக இரட்டையர்களாகவே பிறக்கிறார்கள். இங்கும் சீனாவில் ஏற்பட்ட்து போல, 1920-க்கு பிறகு தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

5.கப்பூஸ்டின் யார் (Kapustin Yar)


ராஷ்யாவில் உள்ள ஒரு ரகசியமான இடம்தான் இந்த கப்பூஸ்டின் யார். இங்கு உள்ள ஏதோ ஒரு அமானுஷ்யம் காரணமாக, அந்த இடத்திற்க்கு மக்கள் செல்ல தடை விதித்துள்ளார்கள். அதை மறைக்கும் வண்ணமாக ராணுவ ஆராய்ச்சிகள் பலவும் இந்த இடத்தில் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி அருகிலிருந்த நகர மக்களை காலி செய்ய வைத்து அந்த நகரையும் முழுமையாக அழித்து விட்டார்கள். இந்த இடம் பல ரகசியங்களுக்கு பெயர் போனது. இரண்டாம் உலகப் போர் சமயங்களில் ஜெர்மனிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த இடம் கூட இதுதான். அந்த ரகசிய இடத்தில் ரஷ்ய ராணுவ வீரர்களும், வேற்றுகிரக வாசிகளும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும் அமெரிக்காவின் ரோஸ்வெல் நிகழ்வு நடந்த ஒரு வருடத்தில் இந்த நிகழ்வும் நடந்துள்ளது. அதன்பின் அமெரிக்காவின் உளவு விமானம் இந்த இடத்தை கடந்து சென்றபோது நிலம் முழுவதும் ஒரு வரைபடம் போலவும் பழங்காலக் குறிப்புகள் போலவும் தென்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

4. மூடநம்பிக்கை மலைகள் (Superstition Mountains)


அரிசோனாவில் உள்ள அமானுஷ்யங்களுக்கு பெயர் போன இடம் தான் இந்த சூப்பர் ஸ்டேஷன் மலை. அமெரிக்கர்களின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ள இடம் என இந்த இடத்தை கூறுவார்கள். முதன் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெக்கோப் வால்ட்ஸ் என்பவர்தான் இந்த மலையில் உள்ள ரகசிய தங்க சுரங்கத்தை கண்டு பிடித்ததாகவும். வெகு காலமாக யாரிடமும் அதைப் பற்றிக் கூறாமல், அவ்ர் சாகும் தருவாயில் தான் இவ்வாறு ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்ததாக வெளியில் கூறியுள்ளார். இவர் இந்த தகவலை கூறிவிட்டு மறைந்தது என்னவோ 1891-இல். ஆனால், அதன்பின் மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தை கண்டுபிடிக்க சென்று, அதில் பலர் உயிருடன் திரும்பவில்லை. இன்றளவும் வருடத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை கண்டுபிடிக்க சென்று அதில் பலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

3. நீர்பால முக்கோணம் (Bridge water triangle)


அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் என்ற நகரிலிருந்து 30 மைல் தொலைவில் தான் இந்த முக்கோண பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் சுமார் 200 மைல் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதி தான் மர்மங்களுக்கு பெயர் போனது. இரவு நேரங்களில் அதிக அலறல் சத்தத்துடன் வெள்ளைநிறப் பேய் உருவங்களும், விசித்திரமான பறவைகள், ராட்சத மனிதர்களை பார்ப்பது மற்றும் கொடூரமான முறையில் கால்நடைகள் அடிக்கடி அடித்து கொல்லப்படுவதும் இங்கு வழக்கமான நிகழ்வாக உள்ளதாம். அதுமட்டுமின்றி நெருப்பு பந்துகளும் சிறுசிறு ஒளிவட்டங்களும் ஆங்காங்கே பரவுவதாக பலர் கூறியுள்ளார்கள். இந்த இடத்தின் இப்படிப்பட்ட மர்மமான நிகழ்வுகளைப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. ஆனால், அமெரிக்க பழங்குடி மக்கள் கூறுவது என்னவென்றால், ஐரோப்பாவிலிருந்து முதன் முதலாக அமெரிக்காவை கைப்பற்ற வந்த சிலர் அங்கிருந்த பழங்குடியின மக்களை தரக்குறைவாக நடத்தியதால் ஆத்திரமடைந்த பழங்குடியினர் விட்ட சாபத்தினால் தான் இந்த இடம் இப்படி மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

2.ஓவர்டோன் பாலம் (Overtoun Bridge)


ஸ்காட்லாந்தில் உள்ள மில்டன் கிராமத்தில் தான் இந்த மோசமான பாலம் அமைந்துள்ளது. முழுக்கமுழுக்க பாறைகளால் 50 அடி உயரத்தில் கட்டப்பட்ட ஒரு பழங்கால பாலம் தான் இது. இங்கே உள்ள அமானுஷ்யம் என்னவென்றால் இந்த பாலத்தை கடக்க கூடிய நாய்கள் திடீரென 4 அடி உயரமுள்ள தடுப்புச் சுவரை தாண்டி குதித்து தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த சம்பவங்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாததால், பலபேர் பலவிதமான விளக்கங்களை கூறுகிறார்கள். அது என்னவென்றால் அந்த பாலத்திற்கு அடியில் ஓடும் நீரில் சில மாயத்தோற்றங்கள் தெரிவதாகவும், அதை பார்த்ததும் நாய்கள் மயங்கி குதித்து விடுகின்றன என்று சிலர் கூறுகிறர்கள். விலங்குகள் மனோதத்துவ மேதையான டாக்டர் டேவிட் சான்ஸ் என்பவர் கூறுவது என்னவென்றால், இந்த பாலத்தில் உயரமான தடுப்பு சுவர்கள் உள்ளதாலும், கீழே தண்ணீர் ஓடுவதாலும் அந்த சத்தத்தினால் நாய்கள் குழம்பி அந்த இடத்தை கண்டு பயந்து, தப்பிக்கும் எண்ணத்தில் குறித்து விடுகின்றன என கூறுகிறார். அந்த கிராம மக்கள் கூறுவது என்னவென்றால் பல வருடங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை அவரது குழந்தையை இந்த பாலத்தில் தூக்கி எறிந்து கொலை செய்து விட்டதாகவும், அந்த குழந்தையின் ஆவிதான் நாய்களை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவதாகவும் கூறுகிறார்கள். இந்த நாய்கள் பாலத்தில் இருந்து குதிக்கும் சம்பவம் சுமார் 60 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் சரியான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை.

1.ஏவோகிஹஹாரா காடு (Aokigahara Forest)


இந்த காடு ஜப்பானில் உள்ள ஃபுஜி மலைக்கு அருகாமையில் தான் உள்ளது. இதை தற்கொலை காடு அல்லது சூசைட் பாரஸ்ட் என்ற பெயரில் கூறினால்தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த காடு அமானுஷ்யங்கள் நிறைந்தது. வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாக பச்சை பசேலென காணப்படும் இந்த காடு உள்ளே செல்லச் செல்ல ஒரு சூனியக்கார காடு போலவே தெரியும். சூசைட் பாரஸ்ட் என இதை ஏன் அழைக்கிறார்கள் என்றால், ஜப்பானில் நடக்கக்கூடிய பாதிக்கும் மேற்பட்ட தற்கொலைகள் இந்த காட்டில்தான் நடக்கின்றன. அதனால், இந்த காட்டிற்குள் பிணங்களும் எலும்புக்கூடுகளாகவும் தான் காணப்படும். இன்றளவும் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் இந்த காட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சூசைட் பாரஸ்ட் உள்ளே செல்வதே ஒரு ஆபத்தான செயல் தான். இந்த காடு, மிக அடர்த்தியான செடி, கொடி, மரங்களை கொண்டுள்ளதால் வெளிச்சம் மிக குறைவாகத்தான் இருக்கும். அதனால், தொலைந்து போவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இந்த காட்டில் உள்ள மண்ணில் காந்தசக்தி அதிகமாக உள்ளதால், சாதாரண திசைகாட்டி கருவி சரியாக வேலை செய்யாது. சாதாரண காட்டிற்குள் தனியாக சென்றால் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் ஏற்படும். பகல் சமயத்திலும் இருளாக இருக்கும் இந்த காடு மயான அமைதியுடன் இருப்பதால் பயத்தை உண்டாக்கி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். அதுமட்டுமின்றி அங்கு ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஆத்மாக்கள் தான் இந்த மயான அமைதிக்கு காரணம் என பலரால் கூறப்படுகிறது. இந்த காட்டில் அதிகம் தூக்கில் தொங்கியே மனிதர்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More